வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு இன்று அதிகாலை நிறைவடைந்ததும் அங்கிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காலை பூசையில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் தூக்கு காவடி, பறவைக் காவடி, பாற்செம்பு, தீச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை மக்கள் மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டுகளில் ஆலயத்துக்கு பக்தர்கள் வருகை தருவதில் சிக்கல் நிலைமைகள் இருந்த நிலையில் இம்முறை அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
ஆலயத்துக்கு விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதோடு சுமார் 700 வரையான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு மக்களுக்கான போக்குவரத்து, பாதுகாப்பு விடயங்களை மேற்கொண்டுள்ளனர்.









