மலையகத்தில் கடும் மழை, நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

0
271

மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்து வருகிறது.

நீரேந்தும் பிரதேசங்களுக்கு பெய்து வரும் அதிக மழை காரணமாக, நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருவதனால் களனி கங்கைக்கு அருகாமையில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நீர் வீழ்ச்சிகளின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளதனால் நீர் வீழ்ச்சிகளை பார்வையிடுவதற்கு அவற்றின் அருகில் செல்வதனை தவிர்த்துக்கொள்வதன் மூலம் ஆபத்துக்களை தவிர்;த்துக்கொள்ளலாம் என பாதுகாப்பு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று இரவு முதல் தொடர்;ச்சியாக மழை பெய்து வருவதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் மண் திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன்,
மண் சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.

இதனால் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை மண்சரிவு அபாயம் மிக்க பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.