அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக, சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்ற, ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்திய சுற்றுலா சம்மேளன நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி….
‘புதிய திட்டங்களின் ஊடாக இலங்கையை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவேன் என நான் உறுதியளிக்கிறேன்.
அதற்காக எமது சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.
இந்த மாநாட்டிற்குப் பின்னர், இங்கு வருகை தந்துள்ள பலர் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வார்கள்.
திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தையும், கதிர்காமக் கந்தன் சன்னதியையும் தரிசிக்க தவறாமல் செல்ல வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆலயம் 2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் நல்லூருக்கு சென்று வருடாந்த உற்சவத்தை கண்டுகளிக்கலாம்.
மலைகளையும் மற்ற அழகிய இடங்களையும் நீங்கள் பார்த்திருந்தாலும், நான் இங்கு சொன்ன இடங்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
ஒகஸ்ட் மாதம் நல்லூர் திருவிழாவும் கண்டி பெரஹெராவும் நடைபெறுகின்றன. இது நமது கலாசாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது.
ஒரு சிறப்பு சுற்றுலா ஈர்ப்புள்ள தலமாக இது திகழ்கிறது. காலி இலக்கிய விழா ஜனவரி மாதம் நடைபெறுகின்றது.
தென்மாகாணத்தின் காலியிலுள்ள ஒவ்வொரு நகரத்திலும் தனித்துவமான திருவிழாக்கள் உள்ளன.
ஹிரிகெட்டிய கடற்கரையில் சுற்றுலா பயணிகளைக் கவரும் டிஸ்கோடெக் நவீன ஜாஸ் இசை என்பன பல இருக்கின்றன.
மாத்தறையில் பல பாரம்பரிய இசைக் கச்சேரிகள் நடைபெறுவதுடன் ஜனவரி மாதம் கொழும்பில் ஆண்ட்ரியோ பொசெல்லியின் பாடலைக் கேட்கலாம்.
இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கும் வகையில் கடனை மறுசீரமைக்க வேண்டும்.
சுற்றுலாத்துறை என்பது கடன் அல்லாத நிதியை திரட்டுவதற்கான ஒரு வழியாகும். எனவே அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
தற்போது இலங்கைக்கு வருடாந்தம் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதனை 5 மில்லியனாக உயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்.
ஒரு சுற்றுலா பயணி ஒரு இரவுக்கு குறைந்தபட்சம் 1000 டொலர்களை செலவழிக்கும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை உருவாக்க வேண்டும்.
தெற்காசிய நாடுகளில் மிகச்சிறிய மாலைத்தீவிலிருந்து சுற்றுலா பற்றி நாம் கற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் பல உள்ளன.
நுவரெலியாவை கொல்ப் விளையாட்டின் மையமாக மாற்றுவதற்கு மேலும் 7 கொல்ப் மைதானங்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
பெரிய சுற்றுலா விடுதிகளை உருவாக்க வேண்டும். பல இடங்களில் துடுப்புப் படகு சவாரியை சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதுடன், அதன் வருமானத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இலங்கையை அதன் தனித்துவமான உணவு மற்றும் கலாச்சார துறைகளுடன் ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக உலகிற்கு காண்பிக்க முடியும்.
கிழக்கு மாகாணத்தை சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
இந்த சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் சட்டங்களை மாற்றுவது அவசியம்.
சரியான திட்டமிடலுடன் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 10 வருடங்களில் தனிநபர் வருமானத்தை அதிகரிக்க முடியும்.
அதன் பின்னரான காலப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது பிரதேசத்தை சுற்றுலாப் பிரதேசமாக மேம்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.’