அநுராதபுரம் – ஓமந்தை தொடருந்து சேவை 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

0
144

அநுராதபுரம் – ஓமந்தைக்கு இடையிலான தொடருந்து மார்க்கம் நாளை மறுதினம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.

குறித்த தொடருந்து மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் முதல் மூடப்பட்டிருந்தது.

மஹவையில் இருந்து ஓமந்தை வரையில் 128 கிலோ மீற்றர் தூரம் உள்ள நிலையில், இந்திய நிதியுதவியின் கீழ் அதன் திருத்தப்பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

97.27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் குறித்த தொடருந்து மார்க்கத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டது.

புதிய பாதையின் ஊடாக தொடருந்துகள் 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் என்பதுடன், முதல் சில நாட்களுக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, அநுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையில் 45 நிமிடங்களில், கொழும்பு கோட்டையில் இருந்து ஓமந்தைக்கு 5 மணித்தியாலயங்களிலும் பயணிக்க முடியும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பாதை திறக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கு பல தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான மார்க்கத்தின் திருத்தப்பணிகள் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கான நேரடி தொடருந்து சேவை இடைநிறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.