புதிய தொழிற்சட்டத்தில், தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அத்தியாயம்!

0
91

புதிய தொழில் சட்டம், தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய அத்தியாயத்தையும் உள்ளடக்கியிருக்கும் எனவும், அது தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கு தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தோட்டத் தொழிலாளர் சங்கங்களின் துணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தாக்கம் செலுத்தும் விசேட நிலைமைகளை கருத்திற்கொண்டு குறித்த பிரேரணையை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தை அந்த குழுவுக்கு வழங்கி உள்ளதாக, அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேசிய தொழில் ஆலோசனை சபை கூட்டத்தில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

அத்துடன், தொழில் சட்டத்துக்கு புதிய திருத்தங்களை சமர்ப்பிப்பதற்கு தொழிற்சங்கங்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரம் வரை, காலம் வழங்க வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய தொழில் ஆலாசேனை சபைக்கு தெரிவித்ததுடன், தொழில் சட்டத்தை சமர்ப்பிப்பதை தாமதப்படுத்தும் நோக்கில் தொடர்புடைய திருத்தங்களை சமர்ப்பிப்பதை தாமதப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இன்னும் இரண்டு வாரங்களில் தொழில் சட்டம் தொடர்பான கருத்துருவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கும் என்றும், பல தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த விடயம் தொடர்பில் இதுவரை தமது கருத்துக்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சட்ட வரைவுத் திணைக்களத்துடன் இணைந்து முன்மொழிவுகளைத் தயாரிப்பதைத் தொடங்கவுள்ளதாகவும், தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள திருத்தம் மற்றும் சட்ட வரைவுகள் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.