மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

0
109

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடைமழையினால் பாதிப்புற்ற போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள பெரியபோரதீவு மற்றும் பட்டாபுரம் கிராமங்களிலிருந்து
தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டன.
பட்டாபுரம் கிராம சேவையாளர் காரியாலயத்தில் வைத்து உணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.
பூமணிம்மா அறக்கட்டளை அமைப்பின் ஊடாக பிரான்ஸ் நாட்டிலுள்ள மரியதாஸ் ஜெயந்தனின் பத்து இலட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்பில் மூன்றாவது கட்டமாக இந்த
நிவாரணம் வழங்கப்பட்டது.
கிராமசேவை உத்தியோகஸ்த்தர் ஜே.முத்துலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் எஸ்.இரங்கநாதன், பிரதித்திட்டப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஆ.வேலாயுதம்; மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.