நாடாளுமன்றத்தை இன்றும் நாளையும் கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று முற்பகல் 9.30க்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது.
இதன்போது மார்ச் மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆயுர்வேத சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 அளவில் தனிநபர் சட்டமூலமான சர்வதேச தேரவாத நிறுவன சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டின் பின்னர் சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.
பின்னர் மாலை 4.30 முதல் 5.30 வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும் என நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நாளை முற்பகல் 9.30 முதல் மாலை 4 மணிவரை வங்கித்தொழில் சட்டமூலம், தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.