மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி, இன்றைய தினம் காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கருப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணத்துக்கு மனித உயிரை விலை பேசலாமா?, அரசே இலங்கையின் மருத்துவத்துறையை மறுசீரமைப்புச் செய், உயிர் காக்கும் வைத்தியர்களே மனித நேயத்தை மதியுங்கள், மருத்துவத்துறையின் அறம் எங்கே, சிந்துஜாவின் மரணம் இறப்பா?,கொலையா?, நீதி நிழலாடுகிறதா?, மாபியாக்களின் கூடாரம் ஆகலாமா வைத்தியத்துறை போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் சிந்துஜாவின் தாய் மற்றும் சிந்துஜாவின் பிள்ளை கலந்து கொண்டதோடு, பெண்கள் அமைப்பு, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அருட் தந்தையர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் காலை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.