எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது! – ஜனாதிபதி

0
43

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது எனவும், விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹோமாகம – பிட்டிபன பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இன்னும் ஓரிரு வாரங்களில் உள்நாட்டு சந்தையில், நிர்ணய விலைக்கு புறம்பாக சந்தையில் அரிசியை விற்பனை செய்யும் செயற்பாடு முற்றாக ஒழிக்கப்படும்.

தற்போது உடனடியாக இதனை செய்வதற்கு முயன்றால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுவிடும்.

அண்மையில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் அவரது மனைவியும் கைதுசெய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அந்த முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரே இங்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப ரீதியாக எவரும் கைதுசெய்யப்படவில்லை, குடும்ப ஆட்சி நிலவியமையினாலேயே முன்னாள் அமைச்சரின் மனைவியும் கைதாகினார்.

9 வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த கோப்புகள் தற்போது திறக்கப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் எந்தவொரு நபர்களையோ, வழக்குகளையோ தெரிவு செய்வதில்லை. உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாத்திரமே சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.

எனவே, ஒருபோதும் அரசாங்கம் விசாரணைகளில் தலையிடாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.