உலக அரச உச்சி மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரை

0
5

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (12) உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்ற உள்ளார். 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி நேற்று (11) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பல அரச தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை அரசியலில் அரசாங்கத்தின் சிறப்பான வெற்றிக்காக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதனையடுத்து பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேயார் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதுடன் பிரித்தானியாவின் நிபுணத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் பயிற்சிகளை பெற்றுக்கொள்ளவதற்கு இலங்கைக்கு காணப்படும் இயலுமையையும் டோனி பிளேயார் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, டவ் ஜோன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அல்மார் லெடூரையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.