அரசாங்கத்தின் முதலாவது பாதீடு நாளை நாடாளுமன்றில்!

0
34

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டை நாளை (17) காலை 10.30க்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கடந்த ஜனவரி 9 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை ஏழு நாட்கள் நடைபெறவுள்ளது.

அத்துடன் இந்த மாதம் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்த குழுநிலை விவாதம் 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரைஇ 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான வாக்கெடுப்பை மார்ச் 21ஆம் திகதி பி.ப 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

பாதீட்டு காலப்பகுதியில் காலை 9.30 முதல் 10 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதியில் பாதீட்டு விவாதம் இடம்பெறும். வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்களான பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21ஆம் திகதிகள் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் மாலை 6 மணி முதல் 6.30 வரையான காலப்பகுதிஇ சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும்.