த.தே.ம முன்னணி விடுத்த அழைப்புக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பதிலடி!

0
19

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், கூட்டாக செயற்படுவது குறித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அழைப்புக்கு, உரிய நேரம் வரும் போது, அது தொடர்பில் கலந்துரையாடப்படும் என, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பதிலளித்துள்ளது.

தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை, முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர், அண்மையில் நேரில் சந்தித்து, கூட்டாக செயற்படுவதற்கான அழைப்பு கடித்த்தை வழங்கியிருந்தனர்.

முன்னணியின் இந்த அழைப்புக்கான பதில் கடிதமொன்றை, சி.வி.கே.சிவஞானம், கஜேந்திரகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், நாடாளுமன்றத்தில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாட விடுக்கப்பட்ட அழைப்பு கடிதம் தொடர்பில், கடந்த 16 ஆம் திகதி, எமது மத்திய செயற்குழுவின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

புதிய அரசமைப்பு உருவாக்கத்தில், தற்போதைய அரசாங்கம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாலும், அதற்கான முன்வரைவு எதையும் சமர்ப்பிக்காத நிலையிலும், நாம் அரசமைப்பு வரைவு பற்றி இப்போது விவாதிப்பது, பொருத்தமானதாகக் காணப்படவில்லை என உணரப்பட்டது.

எமது கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து வலியுறுத்தி வரும் தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடு இன்னும் வலுவுள்ளதாகவே பேணப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அரசாங்கம் அதன் அரசமைப்பு உருவாக்க முன்மொழிவை துரிதமாக முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில், உரிய நேரம் வரும் போது, இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம்.

என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.