அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டுள்ள வரி காரணமாக தங்களது தொழிற்துறை பாதிப்படையும் அச்சம் நிலவுவதாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 90 நாட்கள் சலுகைக் காலத்துக்குள் இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் அமெரிக்காவிற்கான தேயிலை சந்தையில் பின்னடைவு ஏற்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்கா, இலங்கையின் முக்கியமான தேயிலை சந்தையாக உள்ளது.
அத்துடன் இலங்கையில் இருந்து அதிக அளவில் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு அமெரிக்கா இறக்குமதி செய்த மொத்த தேயிலையில் சுமார் 20 சதவீத பங்கை இலங்கை தக்கவைத்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் தேயிலை சந்தையை இலங்கை இழக்குமாயின் குறுகிய காலத்தில் அதற்கு நிகரான மற்றுமொரு சந்தையை அடைவது கடினமான விடயமென இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.