இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் இந்திய ரயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த பாலத்தை இன்று காலை 11.00 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதனைத்தொடர்ந்து கம்பி வழி ரயில் பாலமான அஞ்சி பாலத்தையும் இந்திய பிரதமர் திறந்துவைக்கிறார். பின்னர் பகல் 12.00 மணியளவில் ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ராவில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து, கத்ராவில் இந்திய ரூபாய் 46 ஆயிரம் கோடிக்கும் மேலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், அங்கு ஏற்கனவே நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக இந்திய பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணத்தை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.