அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு

0
17

இந்தியாவின் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் (12) மதியம் புறப்பட்டது.அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்த்துக்கல் நாடுகளை சேர்ந்த 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.ஓடு பாதையில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அவசர கால அழைப்பை விடுத்த விமானி, அந்த விமானத்தை விமான நிலையத்தின் அருகில் இருந்த மேகனிநகர் பகுதியில் இருந்த குதிரைப்பந்தய மைதானத்தில் இறக்க முயன்றார்.

அதற்குள் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம், அந்த பகுதியில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து வெடித்து சிதறியது.இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும் மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் இருந்த 5 மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்த 19 பேர் என 265 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலி ஒருவர்.

பலியான பலரது உடல் அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளதால் உடல்களை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிந்து 6 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த விபத்தில், லண்டன் குடியுரிமை பெற்ற இந்தியரான விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயம் அடைந்த அவர் அகமதாபாத் சிவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் உள்ளார்.

இதேபோல் மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்த டாக்டர்கள், மாணவர்கள் மற்றும் ஜே.பி. வைத்தியசாலை வளாகத்தில் இருந்தவர்கள் என பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI 171-ன் இடிபாடுகளில் இருந்து மேலும் உடல்கள் மீட்கப்பட்டன.
ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.விபத்தில் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 241 பயணிகள் மற்றும் பணியாளர்களைத் தாண்டி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மற்ற 33 பேர் பி.ஜே. மருத்துவக்கல்லூரி வளாகத்தை சேர்ந்தவர்கள், மருத்துவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், மருத்துவ மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் மேகனி நகர் சுற்றுப்புறத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவ வளாக கட்டிடங்கள் மற்றும் அருகில் உள்ள பகுதியில் இருந்த மீட்கப்பட்ட 319 உடல் பாகங்கள் டிஎன்ஏ சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி தெரிவித்தார்.உயிரிழந்த மூன்று மருத்துவர்கள், ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் கர்ப்பிணி மனைவியின் உடல்கள் உறுதிப்படுத்தப்பட்டன.