யாழ் மாவட்டத்தில் இன்றுவரை 59 ஆயிரம் குடும்பங்கள் அரசின் இடர் கால நிதியினைபெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இடர் காலத்தில் வறிய குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்படும் 5 ஆயிரம்ரூபா கொடுப்பனவு யாழில் முதற் கட்டமாக சமுர்த்தி பெறுபவர்கள் அதேபோல் மாற்றுத்திறனாளி கொடுப்பனவு பெறுவோர் வயது முதிர்ந்தோர் கொடுப்பனவு, சிறுநீரக கொடுப்பனவு பெறுவோருக்கு முதற் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது
அந்த அடிப்படையில் சுமார்59 ஆயிரம் குடும்பங்கள் இன்று வரை யாழில் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெற்றிருக்கின்றார்கள்.
ஏனைய பகுதியினருக்குஅரசின் நிதி கிடைத்தவுடன் அதனை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய நிதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவே பொதுமக்கள் பொறுமையாக இருந்து உதவி தொகையினை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்த அரச அதிபர்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றிரவு கிடைத்த பிசிஆர் பரிசோதனைகளில் முடிவுகளின்படி 59பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
அந்த வகையில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர்
யாழ் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3508 ஆக அதிகரித்திருக்கின்றது அதே நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 48 கொரோனா உயிரிழப்புகள் இன்றுவரை பதிவாகியுள்ளன
மேலும் 2908 குடும்பங்களைச் சேர்ந்த 7778 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்
மேலும் தடுப்பூசி வழங்கலைப் பொறுத்தவரை முதற் கட்டமாக வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் தடுப்பூசிகளின் 49 ஆயிரத்து 439 தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்பட்டு முடிவுறுத்தப் படுத்தப்பட்டுள்ளன தடுப்பூசிகள் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசி இன்றைய தினம் காலையில் இருந்து 4 வைத்தியசாலைகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
தற்போது பயணத்தடைஅமுலில் உள்ள நிலையில் எமக்கு சில முறைப்பாடுகள் கிடைத்திருக்கிறது அதாவது சில வீதிகளிலே பொதுமக்கள் அதிக அளவில் நடமாடுவதாக. இதனை நாங்கள் 24 மணி நேரமும் போலீசாரை வைத்து கண்காணிக்க முடியாது
எனவே பொதுமக்கள் தாங்களாகவே அந்த விடயத்தை உணர்ந்து அநாவசிய நடமாட்டங்களை கட்டுப்படுத்தி அநாவசியமாக வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்த்து இந்த நிலைமையினை அனுசரித்து செயற்பட வேண்டும் பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகாமல் மேலும் தொற்றத்தை ஏற்படுத் தாது பயண கட்டுப்பாட்டை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்
தற்பொழுது பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நடமாடும் விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
எனவே பொதுமக்களின் மிக மிக அத்தியாவசியமான சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகின்றது அதாவது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அந்த அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது பொதுமக்கள் சலுகைகளை துஷ்பிரயோகம் செய்யாது நிலைமையினை அனுசரித்து செயற்பட வேண்டுமென்றார்.