பொதுமக்கள் சீற்றம் நாளுக்குள் அதிகரிக்கின்றது – ராஜபக்ச ஆட்சி முடிவிற்கு வரலாம் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

0
321

பொதுமக்களின் சீற்றம் நாளுக்குநாள் அதிகரித்துவருகின்றது என தெரிவித்துள்ள நாரஹன்பிட்டிய அபயராம விகாரையின் தலைமை மதகுரு முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிடுவதற்கு நீண்ட நாள் ஆகாது எனவும் அவ்வேளை அந்த இடத்திலேயே ராஜபக்ச அரசாங்கத்தின் குடும்ப ஆட்சி முடிவிற்கு வரலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் தங்களை அந்த நிலைக்கு தள்ளக்கூடாது என நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாதுளவாவே சோபிததேரர் , நாட்டின் அதிகாரத்தை தனிநபர் ஒருவரின் கரங்களில் கொடுக்கவேண்டாம் அது நாட்டிற்கு பேரழிவை கொண்டுவரும் என தெரிவிப்பார் என நாரஹன்பிட்டிய அபயராம விகாரையின் தலைமை மதகுரு முருதெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதுவே இன்று இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், தனிநபர் ஒருவருக்கு அதிகாரங்களை வழங்கியது தற்போது வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருப்பவர் அமைச்சர் கம்மன்பிலவை அழைத்து தற்போதைய சூழலில் எரிபொருள்களின் விலையை அதிகரிக்கவேண்டாம் என தெரிவிக்கலாம் அதன் காரணமாகவே அவர் ஜனாதிபதி என அழைக்கப்படுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.