கடலில் கலந்துள்ள எண்ணெய்க் கசிவை சேகரிப்பதற்கு புதிய முயற்சி

0
326

இலங்கைக் கடற்பரப்புக்குள் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியாகும் எண்ணெய்க் கசிவை சேகரிப்பதற்காக, பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மூவர் புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

போகல சுரங்கக் குழிக்குள் இருந்து எடுக்கப்படும் விசேட காரீயத்துடன் மற்றுமோர் இரசாயனத்தைக் கலந்து தயாரிக்கப்படும் மெத்தையை, எண்ணெயக் கலந்துள்ள கடற்பரப்பில் போடும் பட்சத்தில், கடலில் கலந்துள்ள எண்ணெயை, மெத்தை உறிஞ்சிவிடும் என்று குறித்த பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் காமினி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேராசிரியர்களான காமினி ராஜபக்ஷ, அமரசேன பிட்டவல, டி.ஆர்.ஏ.குமார மற்றும் நதீஷா குணவர்தன ஆகியோர் இணைந்தே இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின்

இரசாயனவியல் பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் காமினி ராஜபக்ஷ,
ஒரு கிராம் காரீயத்தினால் 120 கிராம் எண்ணெயை உறிஞ்சி எடுக்க முடியும். எனவே விசேட காரீயத்துடன் மற்;றுமோர் இரசாயனத்தைக் கலந்து தயாரிக்கப்படும் மெத்தையை கடலில் போடும்பட்சத்தில் கடலில் கலந்துள்ள எண்ணெயை, மெத்தை முற்றுமுழுதாக உறிஞ்சி எடுத்துவிடும்.

இதற்கான காப்புரிமையும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகம், அடிப்படை ஆய்வுகள் நிறுவனம், இலங்கை நெனோ தொழில்நுட்பம் என்பன இணைந்து எண்ணெய் கழிவுகளை சேகரிப்பதற்கான மெத்தையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

நாடு எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு, தொழில்நுட்பம் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் இலவசமாக செய்துகொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உறிஞ்சி எடுக்கப்படும் எண்ணெயை பிரித்தெடுத்து மீள பயன்படுத்தவும் முடியும்.

கப்பலில் மீதமுள்ள எண்ணெயை கடலுக்குள் விடாமல் வேறு கப்பலுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வுசெய்து வருகின்றோம்.
கடலில் கலந்துள்ள எண்ணெயை மீள உறிஞ்சி எடுக்காவிட்டால் அது பாரியச் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுக்கும்.

இந்தக் கப்பலில் அதிகளவு ஈயம் காணப்படுகிறது. அவற்றை அகற்றுவது மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஒரு டொன் ஈயமானது அரை டொன்னாகக் கரைவதற்கு 700 வருடங்களாகின்றன. இவை நீரில் கலப்பதால் ஏற்படும் சேதம் பல தலைமுறைகளை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.