நாம் தோல்வியடையவில்லை! தோல்வியடையப் போவதுமில்லை!! -இராணுவ தளபதி

0
472

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படாமல் முன்னெடுக்கப்படுகின்றன என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றுகாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

´நாம் தோல்வியடையவில்லை. எவரும் தோல்வியடையவில்லை. எப்படி தோல்வி எனக் கூறுவது? மக்கள் தொகை அதிகமுள்ள அதேபோல் அதிக நீரோட்டம் நிறைந்த பகுதியாகக் கருதப்படும் கொழும்பில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டுக்கும் மீன் விற்பனை செய்யும் மத்திய நிலையத்தில் ஏற்பட்ட தொற்றே இன்றைய இக்கட்டான நிலைக்குக் காரணம்.

தற்போது மினுவாங்கொடை கொரோனா தொத்தணி முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கொத்தணி மூலமே நாடளாவிய ரீதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். நாம் தோல்வியடையவில்லை. தோல்வியடையப் போவதும் இல்லை. நாட்டில் சிறந்த தலைமைத்துவம் உள்ளது. இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்´ என்றார்.