சந்திரிகாமம் தோட்டத்தில் தீ விபத்து! – வீடு முற்றாக எரிந்து நாசம்

0
133

டயகம பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட சந்திரிகாமம் தோட்டத்தில் குடியிருப்பில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீட்டுக்குள் ஏற்பட்ட தீயால் குறித்த வீடு முற்றாக எரிந்தது. இதனால் இந்த வீட்டில் இருந்த 3 பேர் பாதிக்கப்பட்டனர்.

தீ ஏற்பட்டபோது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்குத் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் எனப் பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகின.

இதேவேளை, இது தொடர்பாக டயகம பொலிஸ் நிலையத்துக்கும், தோட்ட நிர்வாகத்துக்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களைக் கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டனர்.

தோட்ட நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றது.