வெலிகமைவில் 100 கிலோ ஹெரோயின் மீட்பு!- விசாரணைக்கு சர்வதேச பொலிஸார் உதவி

0
237

வெலிகமை பகுதியில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் சர்வதேச பொலிஸாரிடம் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 100 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இந்தச் சுற்றிவளைப்புக்குப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு மற்றும் இரகசிய தகவல் பிரிவும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சுமார் ஐந்து மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகளுக்கமையவே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மீட்கப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருள் இதுவாகும்.

ரத்கமை பகுதியில் வசித்து வந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார் எனக் கூறப்படும் சந்தேகநபருக்குச் சொந்தமான போதைப் பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த நபர் தற்போது இத்தாலியில் வசித்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இப்போதைப்பொருள் தொகையை கடல் மார்க்கமாகவே நாட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சர்வதேச ரீதியில் இந்தக் கடத்தல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு சர்வதேச பொலிஸாரிடம் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மற்றும் ஏனைய துறைகளிலும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளோம்.

இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு உள்நாட்டிலுள்ள சில கடத்தல் காரர்களும் உதவி புரிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அவர்களை அடையாளம் காண்பதற்கு தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேகநபர்கள் மற்றும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கார், போதைப்பொருள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனத் தெரிவித்தார்.