காலி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில், நேற்று இடம்பெற்ற இரு விபத்துக்களில் இருவர் மரணமடைந்தனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக காலி எல்பிட்டிய பிரதேசத்தில், அம்பலாங்கொட நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்தார்.
மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரகும் மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 45 வயது நபரே மரணமடைந்தார்.
லொறியொன்றை முந்திசெல்ல முற்பட்டபோதே குறித்த மோட்டார் சைக்கிளானது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் லொறியின் சாரதி, மற்றும் மற்றுமொரு மோட்டார் சைக்கிளின் சாரதி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அனுராதபுரம் ஹொரவப்பொத்தான பிரதேசத்தில், ஹொரவப்பொத்தான நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மரணமடைந்தார்.
மொரகெவ பிரதேசத்தை சேர்ந்த 65 வயது நபரே மரணமடைந்தார். இந்த விபத்தையடுத்து லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.