மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் கடந்த மாதம் 26ம் திகதி தாக்கப்பட்டமையினை கண்டித்தும், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையினை கண்டித்தும் மட்டக்களப்பில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு ஊடகவியலாளர் தெழில் சங்கம் ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் கடந்த மாதம் 26ம் திகதி செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும்போது ஊடகவியலாளர் தேவ பிரதீபன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் இடம்பெற்று வருகின்றது. இது நிறுத்தப்பட வேண்டும் என இந்த போரடத்தின்போது அரசாங்கத்திடம் அழுத்தம் தெரிவிக்கப்பட்டது.
ஊடக சுதந்திரத்தை பறிக்காதே, ஊடகவியலாளரை அடக்காதே, அரசே ஊடகவியலாளருக்கு நீதி வழங்கு, ஊடகத்தை அடக்க நினைக்கும் அரசியல்வாதிக்கு துணை போகாதே போன்ற பல கோசங்களை எழுப்பியவாறு இப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் கிருஸ்ணகுமார் தலைமையில் இடம் பெற்ற இப்போராட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறினேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா. துரைரெத்தினம், பிரசன்னா இந்திரகுமார், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.