அம்பாறையில் நல்லிணக்க நடைபவனியும்,கலாசார விளையாட்டு நிகழ்வும்

0
148

அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழு மற்றும் பிரதேச நல்லிணக்க குழுக்களின் ஏற்பாட்டில் பௌத்தம் இந்து இஸ்லாமிய கத்தோலிக்க இனங்களை ஒன்றிணைத்து தெஹியத்தக்கண்டியில் நல்லிணக்க நடைபவனியும் கலாச்சார விளையாட்டு நிகழ்வும் இடம்பெற்றது.

தெஹியத்தக்கண்டி பிரதேச பிரதான வீதி சுற்று வட்ட சந்தியில் இருந்து ஆரம்பமான சமாதான நல்லிணக்க நடைபவனியானது தெஹியத்தக்கண்டி மகாவலி மைதானம் வரை சென்றடைந்தது .

இதன்போது எதிர்கால சந்ததியின் நலனுக்காக ஒன்றினைவோம், நீதி,சுதந்திரம்,புரிந்துணர்வை உறுதிப்படுத்தி சமாதானத்தை கட்டியெழுப்புவோம், தனித்துவம் கலாசாரம் விழுமியங்களை மதித்து இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவோம் ஆகிய வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு நல்லிணக்க பதாகைகள் கொண்டு குறித்த நடை பவனி இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

தெஹியத்தக்கண்டி மகாவலி மைதானத்தில் கலாசார, விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் விளையாட்டு போட்டிகளின் கலந்து கொண்டு வெற்றியீட்டிவர்களுக்கு பரிசு வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் தெஹியத்தக்கண்டி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், தெஹியத்தக்கண்டி பொலிஸ் நிலைய சுற்றுசூழல் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட சமாதானம் மற்றும் சமூக பணி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் டி. இராஜேந்திரன், நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்கள்,தெஹியத்தக்கண்டி ,நாவிதன்வெளி , சம்மாந்துறை,இறக்காமம் ,உகன,மகாஓயா , பதியத்தாலவ ஆகிய 07 பிரதேச செயலக பிரிவில் உள்ள மாவட்ட நல்லிணக்க குழு இணைப்பாளர்கள், பிரதேச நல்லிணக்க மன்ற இணைப்பாளர்கள், நல்லிணக்கமன்ற உறுப்பினர்கள் பிரதேச நல்லிணக்க குழு
இளைஞர்,யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை சமாதானமும் சமூக பணி நிறுவனத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் சமூக நல்லிணக்கம் தொடர்பில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம் பெற்றுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.