(video) யாழில் தொடருந்துகள் மீது கல் வீச்சு தாக்குதல் : 3 சிறுவர்கள் கைது

0
56

யாழ்ப்பாணத்தில் ரயில்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த 3 சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்தனர்.

யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் வைத்துத் ரயில்கள் மீது கடந்த சில தினங்களாகக் கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன.

அந்த தாக்குதலில் ரயில்களின் கண்ணாடிகள் சேதமடைந்ததுடன், பயணி ஒருவரும் காயமடைந்தார்.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ரயில் நிலைய அதிபரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தநிலையில் ரயில் பயணித்த பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளி ஒன்றில், 3 சிறுவர்கள் ரயில் மீது கல் வீச்சுத் தாக்குதலை நடாத்துவது பதிவாகி இருந்தது.

குறித்த காணொளியின் அடிப்படையில், 3 சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் எச்சரிக்கை செய்து பெற்றோரிடம் ஓப்படைக்கப்பட்டனர்.