உகந்தைமலை முருகன் ஆலயத்தில்
சிரமதான பணிகள் முன்னெடுப்பு

0
191

கதிர்காம யாத்திரிகர்களின் நன்மை கருதியும் ஆலய மகோற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு அம்பாரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற மாபெரும் சிரமதானப்பணிகளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு திணைக்களங்களும் நிறுவனங்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

ஆலையடிவேம்பு, திருக்கோவில், காரைதீவு, கல்முனை, நாவிதன்வெளி, களுவாஞ்சிக்குடி போன்ற பிரதேச செயலகங்களும் இப்பணியில் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற சிரமதானப் பணிகளில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதியான முறையில் ஆலய வளாகத்தில் இருந்த பற்றைகள், குப்பைகள் அகற்றப்பட்டதுடன் நீராடுவதற்கு பயன்படுத்தும் கிணற்றை அண்டிய பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டன.

உகந்தை முருகனின் கொடியேற்றம் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் ஆகஸ்ட் 11ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

இதேவேளை பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை கடந்த 22ஆம் திகதி திறக்கப்பட்டதுடன் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி மூடப்படுகின்றது.