ஐ.தே.க. செயலாளராக பாலித ரங்கே பண்டார

0
367

ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் பெயரை கட்சி செயற்குழுவில் பிரேரிக்க இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு நாளை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கூடவுள்ளது. இதன்போதே கட்சியின் செயலாளராக பாலித்த ரங்கே பண்டாரவின் பெயரை பிரேரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

2021 வருடத்துக்கான ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அதிகாரிகள் சபையை தெரிவு செய்து கொள்வதற்காகவும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயவே கட்சியின் செயற்குழு கூடுகின்றது. 

மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு பாலித்த ரங்கே பண்டாரவின் பெயர் பிரேரிக்கப்பட்டிருக்கின்ற போதும் அந்த பதவி அவருக்கு கிடைக்காவிட்டால் கட்சியின் உயர் பதவி ஒன்று அவருக்கு கிடைக்கும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் செயலாளர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, பதில் செயலாளராக ஷமல் செனரத் செயற்பட்டு வருகின்றார்.

இன்று இடம்பெறும் செயற்குழு கூட்டத்தின்போது, கட்சி தலைவர் பதவி தவிர கட்சியின் ஏனைய பதவிகளுக்கான உறுப்பினர் தெரிவுசெய்துகொள்ளப்பட இருக்கின்றது.

அத்துடன் ருவன் விஜேவர்த்தன வகிக்கும் பிரதித் தலைவர் பதவியில் மாற்றம் எதுவும் இடம்பெறாது எனவும் தெரியவருகின்றது.

2019இல் இடம்பெற்ற கட்சி சம்மேளனத்தின் போது  கட்சி தலைமைக்கு அடுத்துவரும் 5வருடங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் பிரேரிக்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.