ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மன்னார் சாவற்கட்டு பகுதியில் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சூட்சுமமான முறையில் தலைக்கவசத்திற்குள் மறைத்து வைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையில், 31 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் அவரிடமிருந்து 20 கிராம் 850 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி மன்னார் பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சாவற்கட்டு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருடன், கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியன மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மற்றும் சான்றுபொருட்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.