அம்பாறை கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர முன்னாள் கணக்காளரை எதிர்வரும்செப்டம்பர் 06 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,
குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின் விண்ணப்பங்களை ஆராய்ந்த நீதிவான், முன்னாள் கணக்காளர் உட்பட 04சந்தேகநபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கல்முனை மாநகர சபையின் நிதி மோசடி விவகாரம் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு,
அண்மையில் நால்வர் கைதாகி இருந்தனர்.
அவர்களில் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஏனைய மூன்று சந்தேக நபர்களும் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தொடர்ந்தும்,
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நேற்றைய தினம் திருகோணமலையில் வைத்து கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது செய்யப்பட்டிருந்தார்.
திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் கணக்காளர், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு
வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவு பிறப்பித்திருந்தார்.
முன்னாள் கணக்காளர் உள்ளிட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் சேவைக்காலத்தில் வரியிருப்பாளர்கள் மேற்கொண்ட கொடுக்கல்-வாங்கல்
செயற்பாடுகளின்போது முறைகேடுகள் எவையும் இடம்பெற்றுள்ளனவா? என்பது தொடர்பிலும், இவற்றுடன் வேறு எவராவது சம்மந்தப்பட்டிருக்கின்றனரா? என்பது குறித்தும்
குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் வரி மோசடி தொடர்பில் விசாரணைகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், பலர் கைது செய்யப்பட்டு
பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் நிமித்தம் நிர்வாக மட்டத்திலும் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நிதிகையாடல் சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில் கல்முனை பொலிஸ் நிலையம், அம்பாறை விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் விசாரணை
பொறுப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவிடம் இவ்வழக்கு விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.