” மஹர சிறையில் மரணமடைந்த கைதிகளில் நால்வர் துப்பாக்கிச் சூட்டில் மரணம் என்று விசாரணை அறிக்கை கூறுகிறது. ஆகவே கைதிகள் தங்களுக்குள் அடித்துக்கொண்டே செத்தார்கள் என அரசு ஆரம்பத்தில் அறிவித்தது பச்சை பொய்.” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
கைதிகள் இறப்பினால் கவலையடைந்தாலும், விசாரணை குழு உறுப்பினர்கள், துணிச்சலாக உண்மையை வெளிக்கொண்டு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த கைதிகளின் பல கோரிக்கைகளில் ஒன்று “குடிக்கத் தண்ணீர் தாருங்கள்” என்பதாகும். இதற்கு முன் ரத்துபஸ்வெல ஊரில் தண்ணீர் கேட்ட மக்களை இதே கட்சி அரசு சுட்டு கொன்றது. இப்போதும் அப்படித்தான்.
ஆகவே குடிக்கத் தண்ணீர் கேட்டால் சுடும் அரசு இது. 69 இலட்ச வாக்குகளை பெற்று பதவிக்கு வந்த இந்த ராஜபக்ஷ அரசு, இந்த துப்பாக்கிச் சூடு மூலம் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையை அறிவிக்கிறது.
அதாவது, “தங்கம் கேட்டால்கூட, நாங்கள் தந்தாலும் தருவோம். ஆனால், தண்ணீர் கேட்டால் கட்டாயம் சுடுவோம்” என்பதுதான் -என்றார்.