குருந்தூர் மலைப் பகுதி பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்பு – யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம்!

0
210

முல்லைத்தீவு குருந்தூர் மலைப் பகுதி பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால், ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு குருந்தூர் மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும், பௌத்த மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால், இன்று, ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, இன்று நண்பகல் 12.00 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள், அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு, பேரணியாக, இராமநாதன் வீதி ஊடாக, பரமேஸ்வராச் சந்தியை அடைந்து, அங்கு, சிறிது நேரம் வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பின்னர் பேரணியாக, பல்கலைக்கழகத்தை அடைந்தனர். முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை, தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும் நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி, பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து, நேற்று, குருந்தூர் மலையில், அப்பகுதி மக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரின் பங்கேற்புடன், ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் இ.மயூரன் ஆகியோர் கைது செய்யப்பட்டமையை கண்டித்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.