சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்க தடை விதித்தது பஷிலா?

0
185

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது. பதவியை தக்கவைத்துக்கொள்ள ஜனாதிபதி பொதுஜன பெரமுனவிற்கு ஏற்றாற்போல் செயற்படுகிறார் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது கொள்கைக்கமைய வரையறுக்கப்பட்ட கால அடிப்படையில் சர்வக்கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.
சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம் மற்றும் அதன் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதி இதுவரை வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவில்லை. சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாரிய தடைகளை ஏற்படுத்தியுள்ளார். சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காமல் மக்களால் புறக்கணிக்கப்பட்ட பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை முன்னெடுத்து செல்லும் அரசியல் சூழ்ச்சியினை பஷில் ராஜபக்ஷ முன்னெடுத்துள்ளார். பாராளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பின் போது பலருக்கு வரபிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளமை தற்போது வெளிப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக பொதுஜன பெரமுனவின் தேவைக்கமைய செயற்படுகிறார். சர்வக்கட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன பிரதான பங்குதாரராக செயற்படும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது. மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் தரப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளமை அரசியல் கட்டமைப்பு தொடர்பில் மக்கள் கொண்டுள்ள வெறுப்பை தீவிரப்படுத்தும். அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நிறைவடைந்துள்ளது ஆகவே தனது விருப்பப்படி செயற்படலாம் என அரச தலைவர்கள் கருதுவது தவறானது. சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள் அரசாங்கத்திற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காமல் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மக்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள் என திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.