சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்னில் இயங்கும் இயந்திரபடகு முதல்முறையாக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
சூரிய சக்தியிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு 13 குதிரைவலுக் கொண்ட அதி உச்ச வேக இயந்திரத்தினைக் கொண்டு இயங்கும் மீன்பிடிப்படகே இவ்வாறு கடற்கரையில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
மண்ணெண்ணெய், பெற்றோல், டீசல் போன்ற எரிபொருட்களின் தேவை இல்லாமல் வெறுமனே சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு இயங்க வைக்கின்ற மோட்டார் இயந்திரம் மீன்பிடித் தேவைகளுக்கு மிகவும் பயனுள்ள விடயமாக எதிர்காலத்தில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், நிறுவன அதிகாரிகள், கடல் தொழிலாளிகள் முன்னிலையில் இந்த சூரிய சத்ரியில் இயங்கும் மின்சார படகு வல்வெட்டித்துறைக் கடற்கரையில் பரிசீலனை செய்து காட்டப்பட்டது.
இவ்வாறான தொழில்நுட்ப விடயங்கள் உட்பகுத்தப்பட்டு உருவாக்கப்படுகின்ற தேவை கருதிய கண்டுபிடிப்புகள் அதனுடைய நீடித்து நிலைக்கும் தன்மையை பொறுத்து பாவனையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பது வெளிப்படை உண்மை.
எதிர்காலத்தில் கடல் தொழிலாளிகளின் தேவைகள் இந்த இயந்திரங்களினால் பூர்த்தி செய்யப்படுமாயின், பாரிய எரிபொருள் பிரச்சனைகளில் இருந்து அவர்களை மீள வைக்கும் என்பது இங்கு வருகை தந்திருந்த பலரது கருத்தாக அமைந்திருந்தது.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மணிவாசகம் என்பவரது முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது கடல் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.