செஹான் மாலகேவின் கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

0
162

செஹான் மாலகே பலவந்தமாக கைதுசெய்யப்பட்ட விடயத்தை வன்மையாகக் கண்டிப்பதாக பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் செஹான் மாலகே, வெள்ளைவானில் பலவந்தமாக அழைத்து செல்லப்படுவதை தொலைக்காட்சி வாயிலாக நாம் பார்வையுற்றோம். அவர் தான் பலவந்தமாக அழைத்து செல்லப்படுவதை காணொளியாக வெளியிடாமல் இருந்திருந்தால் அவர் இன்று எங்கு இருந்திப்பார் என்பதுகூட தெரியாமல் போயிருக்கும். அதிஸ்டவசமாக அவர் அந்தக் காணொளியை வெளியிட்டார்.

அவர் கடத்தி செல்லப்படும் போது அதனை நேரடி காட்சியாக முழு நாட்டுக்குமே காண்பித்துவிட்டார்.

பொலிஸார் ஒருவரை கைதுசெய்வதற்கான முறைமை ஒன்று காணப்படுகின்றது. பொலிஸ் சீருடையில, பொலிஸ் ஜீப் வண்டியில் வந்தே ஒருவரை கைதுசெய்ய வேண்டும்.

அதேபோன்று எதற்காக கைதுசெய்கின்றோம் என்ற காரணத்தையும் பொலிஸார் முதலில் தெரியப்படுத்த வேண்டும். எனினும் செஹான் மாலகேவின் கைதுவிடயத்தில், முன்னறிவிப்பின்றி அவரை கடத்தி செல்வது போன்றே அவரது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே இது ஜனநாயக நாடொன்றுக்குப் பொருந்தாத ஒழுக்கமற்ற செயலாகவே நான் பார்க்கின்றேன். மிகவும் கீழ்த்தரமான, மிலேச்சத்தனமான இந்த சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிகின்றோம்.

இந்தச் சம்பவத்தினூடாக செஹான் மாலகேவின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன். மனித உரிமைகள் தொடர்பில், ஜெனிவா கூட்டத்தொடரில் நியாயமான தீர்வை எதிர்பார்க்கும் இந்த அரசாங்கம் இந்த சந்தர்ப்பதில் மனிதர்களுக்கு விளைவிக்கும் அநீதியானது மூளையிருப்பவர்கள் செய்யும் செயற்பாடா என்று வினவ தோன்றுகின்றது.