டெங்கு அபாய வலயங்கள் 67ஆக அதிகரிப்பு!

0
130

நாட்டில் நாளொன்றில் 328 பேருக்கு மேற்பட்டோர் டெங்கு நோயாளர்களாக அடையாளங்காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடுமுழுவதும் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 25 சதவீதமானோர் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகளில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் நளின் ஆரியரத்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு இன்று(12) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதேவேளை, இவ்வருத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 43ஆயிரத்து 346பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கண்டி குருநாகலை மற்றும் புத்தளம் உள்ளிட்ட 6 மாவட்டங்களிலிலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதன்படி கம்பஹாவில் 9ஆயிரத்து 638பேரும், கொழும்பில் 9ஆயிரத்து 257 பேரும், களுத்துறையில் 2ஆயிரத்து 759 பேரும், கண்டியில் 2ஆயிரத்து 478 பேரும், குருநாகலையில் ஆயிரத்து 555 பேரும், புத்தளத்தில் இரண்டாயிரத்து 634 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 9 ஆயிரத்து 638 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்த நிலையில் இம்மாத ஆரம்ப 10 நாட்களுக்குள் 3 ஆயிரத்து 557 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் – என தெரிவிக்கப்படுகிறது.

இம்மாத இறுதிக்குள் மேற்குறித்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுகிறது. 

தற்போது நாட்டில் மழையுடனான காலநிலை நிலவுவதால் நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளது. 

ஆகவே, நீர் தேங்கியிருக்கும் மற்றும் நுளம்புகள் பெருக்கத்து ஏதுவாக இருக்கும் இடங்களை கண்டறித்து அவற்றை இல்லாதொழிப்பதன் மூலம் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் நுளம்பு பெருக்கம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட மற்றும் கொத்தடுவ பிரதேசங்களில் நுளம்பு பெருக்கம் அதிவேகமாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

ஒரு பகுதியில் தொற்று நுளம்புகளின் அடர்த்தியை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுட்டெண் கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கணக்கிடப்படும் வழக்கமான மதிப்பை விட ஐந்து மடங்கு அதிகமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுட்டெண் மதிப்பு 5வீதமாக இருக்க வேண்டும் என்றாலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் 25 வீதமாக பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், கொழும்பு மாவட்டத்தில் ஜூன் மாத இறுதிக்குள் டெங்கு தொற்று தீவிரமடைந்து ‘கடுமையான’ தொற்றுநோய் நிலை உருவாகும் அபாயம் இருப்பதாக வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைவாக எதிர்வரும் காலங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகும் நிலை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.