தாக்குதல் சம்பவங்களின்போது பொலிஸார் அமைதியை பேணுவதற்கான காரணம் என்ன? புத்திக்க பத்திரண எம்.பி

0
124

எதிர்க் கட்சி அலுவலகத்தின் மீதான தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களின்போது பொலிஸார் அமைதியாக இருப்பற்கான காரணம் என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்தனர்.

பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கேள்வியொன்றை எழுப்பி உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,

பல வாரங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்த கூட்டமொன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய ஒருங்கமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொருளாதார ரீதியில் பெண்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி ஜனாதிபதியின் வீட்டு வளாகத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டுக்கு முன்பாக சில தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வதால் அவரிடமிருந்து எதனையும் வெற்றிக்கொள்ள முடியாது. எனினும் அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்துக்கு முன்பு முட்டை வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் என்பது ஜனாதிபதி செயலகம் இல்லை. அமைச்சொன்றின் காரியாலயமும் இல்லை. எனவே இந்த காரியாலயத்துக்கு வந்து வெற்றிக்கொள்வதற்கான காரணம் ஒன்றும் இல்லை.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் ஒவ்வொரு இடத்திலும் பொலிஸார் கடமையில் இருக்கின்றனர். எனினும் இந்த சம்பவங்கள் நடக்கும்போது பொலிஸார் தலையீடு செய்வது இல்லை. யாரும் வந்து முட்டைவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு செல்லாம் என்ற ஒரு நிலைமையே காணப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் என்பது இந்த நாட்டின் பிரதான எதிர்க் கட்சியின் காரியாலயமாகும். எனவே இந்த காரியாலயத்தின் மீது முட்டைவீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை சாதாரண ஒரு விடயமல்ல.

இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது பொலிஸார் அமைதியாக இருப்பது ஏன்? பொலிஸாரின் விடயத்தில் அரசாங்கம் தலையீடு செய்வதனாலா?

நாம் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தும்போதும் மட்டும் ஒவ்வொரு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கான செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

ஆனால் எதிர்க் கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குல் நடத்தும்போது மட்டும் தாக்குதலை நடத்துமாறு கூறிவிட்டு அமைதியாக இருக்கின்றனர். பொலிஸார் ஏன் இரண்டுவிதமாக செயற்படுகின்றனர்.