உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை அறிவிப்பதற்காக நாடாளுமன்ற விசேட அமர்வு இன்று நடைபெறுகிறது.உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் இன்றைய தினம் அறிவிக்கவுள்ளார்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலியின் தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற விசேட அமர்வை இன்று காலை 9.30க்கு கூட்டத் தீர்மானிக்கப்பட்டது.அதன்படி நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் விதிகளின்படி, பிரதமர் ஹரினி அமரசூரிய சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
அத்துடன், இந்தச் சட்டமூலத்தை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சு சார் ஆலோசனைக் குழுவை இன்றைய தினம் கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணிவரை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை முன்வைப்பதாயின் அவற்றை எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு முன்னர் வழங்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.