நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் மீள் பரிசீலனை – ஜனக பண்டார

0
224

பட்டதாரி பயிலுநர் மற்றும் டிப்ளோமாதாரி பயிற்சி வேலைத்திட்ட நியமனத்தின்போது நிராகரிக்கப்பட்டு மீண்டும் மேன்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்துவம் கொண்டிருத்தல், தொழிலில் ஈடுபட்டிருத்தல், களனி பல்கலைக்கழக பட்டச் சான்றிதழ் பெற்றிருக்காமை முதலான காரணங்களால் நியமனம் வழங்க மறுக்கப்பட்ட பட்டதாரிகள் சமர்ப்பித்த மேன்முறையீட்டு விண்ணப்பங்களின் தகைமையைப் பரிசீலித்து அவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முறைப்பாடு செய்யப்பட்ட பின் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தொழில் வழங்குவது தொடர்பில் எதிர்காலத்தில் கொள்கை அளவிலான தீர்மானம் எடுக்கப்படும். வேறுபாடுகள் பாராது நியமனங்கள் வழங்கப்படுவதுடன் 2019ஆம் ஆண்டு நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவர்.

05.02.2020 திகதி 20/0312/201/008 அமைச்சரவை விஞ்ஞாபனத்துக்கு அமைவாக ஜனாதிபதியின் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை;வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்துக்கு அமைய விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேன்முறையீடு செய்ய 27.09.2020 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேன்முறையீடு செய்யப்பட்டு இரண்டுமாத காலத்திலும் எவ்விதமான பதிலும் உரியவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பில் வேலையற்ற பட்டதாரிகளால் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதேவேளை ஜனாதிபதி அறிவித்த 50 ஆயிரம் பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.