நீதி அமைச்சின் வடக்குக்கான முதலாவது நடமாடும் சேவை ஆரம்பம்!

0
175

நீதி அமைச்சின் வடக்கு மாகாணத்துக்கான முதலாவது நடமாடும் சேவை வவுனியாவில் இன்று நடைபெற்றது.

நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் ஊடான சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் ‘நீதிக்கான அணுகல்’ எனும் விசேட நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக வடக்கு மாகாணத்துக்கான முதலாவது நடமாடும் சேவை வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரோகிணி கெட்டிகே தலைமையில் இன்று காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை இடம்பெற்றது.

இதன்போது, பொதுமக்களைப் பாதிக்கும் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டல், நல்லிணக்கம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துதல், வடக்கு மாகாண மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் ஆலோசனை வழங்கல், பிறப்பு – திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுதல், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் சேவைகளை வழங்குதல் என்பன முன்னெடுக்கப்பட்டன.

நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சுக்களின் கீழுள்ள காணோமல்போணோர் பற்றிய அலுவலகத்தின் சேவை நிலையம், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, இலங்கை மத்தியஸ்தர் சபைகள் ஆணைக்குழு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் கலந்துகொண்டு மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கியதுடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் தெளிவுபடுத்தினர்.

நிகழ்வில் நீதிச் சேவை ஆணைக்குழு பணிப்பாளர் சந்திக்க லொக்கு கெட்டி, நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரோகிணி கெட்டிகே, நீதிச் சேவை ஆணைக்குழுவின் உதவிச் செயலாளர் சந்திர மாலனி, இழப்பீ ட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் நாசிமா அகமட், வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.