சிவில் சமூக நிறுவனங்களில் மகளிர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான பாலின உணர்திறன் கொள்கைகள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு அம்பாறையிலுள்ள தனியார் ஹோட்டலில் இன்று இடம் பெற்றது.
கிழக்கு மாகாண கிராமிய திணைக்களமும் பெரேண்டினா அரச சார்பற்ற நிறுவனமும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது சிவில் சமூக நிறுவனங்களில் காணப்படும் மகளீர் கிராம அபிவிருத்தியின் செயற்பாடுகள், கிராமிய பெண்களின் திறன் அபிவிருத்தி, பெண்களின் ஊடாக சிறந்த வலைப்பின்னலை உருவாக்கி அபிவிருத்தியை நோக்கி நகர்தல் மற்றும் பெண்களின் பொருளாதார நிலைமையும் அவர்களின் ஊக்கமும் போன்ற தலைப்புகளில் களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளர் இனோகா பிரியதர்ஷினி கலந்து கொண்டு வளவாளராகச் செயற்பட்டு கருத்துக்கள் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களிடம்
கிராமிய அபிவிருத்தி சங்கங்கள், பெண்கள் கிராமிய அபிவிருத்தி சங்கங்களை ஒன்றாக்குதல், கிழக்கு மாகாண கிராமிய சங்கங்களின் யாப்பை மாற்றுதல், பெண்கள் கிராமிய சங்கங்களில் பெண்களின் பங்குபற்றலை அதிகரித்தல், பெண்கள் கிராமிய மட்ட சங்கங்களுக்கு பயிற்சிகள் வழங்குதல், பெண்கள் கிராமிய அபிவிருத்தி சங்கங்களின் நிலவுகின்ற குடும்ப ஆட்சி மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் என்.தனராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன், அம்பாறை மாவட்ட பிரதேச செயலக செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெண்கள் கிராமிய அபிவிருத்தி உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் செயற்றிட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட நாவிதன்வெளி, அட்டாளைச்சேனை, பொத்துவில், உகண மற்றும் மகாஓயாபிரதேச செயலக உறுப்பினர்கள்,பெரேண்டினா நிறுவன திட்ட முகாமையாளர் எஸ்.சிவராஜா,பெரேண்டினா நிறுவன திட்ட உத்தியோகத்தர்,பெரேண்டினா நிறுவன அம்பாறை மாவட்ட கணக்கு மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் மட்டக்களப்பு மாவட்ட கணக்கு மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எனப்பலர் கலந்து கொண்டனர்.