பெரமுனவின் ஆதரவின்றி அரசாங்கம் உருவாவது கடினம் – ரோஹித சுட்டிக்காட்டு

0
144

நாட்டில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன இல்லாமல் தனியாக அரசாங்கமொன்றை உருவாக்கிவிட முடியும் என்று சிலர் கருதுவார்களாக இருந்தால் அது தவறான விடயமாகும். எங்களின் பங்களிப்பின்றி அரசாங்கமொன்றை உருவாக்க முடியாது. அவ்வாறு, அடுத்த வருடம் பொதுஜன பெரமுனவின் தலைமையில் தனித்து ஆட்சி அமைக்க முடியாவிட்டால் பெரும் அதிகாரம் பொருந்திய எதிர்க் கட்சியாக செயற்படுவோம் என்று அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறை, பண்டாரகம, மில்லனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றும் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் மக்கள் இருக்கிறார்கள். இருந்தபோதும் துரதிர்ஷ்டவசமாக கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கினோம். ஜனாதிபதியானதன் பின்னர் கோட்டா சேதன பசளைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், நாங்களும் அதனால் சிக்கலை சந்தித்தோம். இறுதியில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய, ஒரு இலட்சம் பேரை கூட கொழும்புக்கு அழைத்துவர முடியாதவர்களுக்கு பயந்தார். அந்த பயத்தின் பிரதிபலனாகவே வீடுகளுக்கு தீர்வைக்கப்பட்டது. கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன. ஆரம்பத்திலேயே அவர்களை அடக்கியிருந்தால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது

தற்போது ரணில் அவற்றை செய்கிறார். நாட்டில் சட்டமென்றவொன்று இருக்கவேண்டும். சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால் துரதிர்ஷ்டவசமாக 1971 ஆம் ஆண்டு, 1988- 89 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற அதே அச்சநிலைமையை 2022ஆம் ஆண்டில் மீண்டும் சந்திக்க நேர்ந்தது.

இருந்தபோதும் மக்கள் விடுதலை முன்னணி தமக்கு இருக்கும் மக்கள் ஆதரவை காட்டி கூட்டங்களை நடத்தி வருகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் சரியான முறையில் சுவரொட்டிகளை மக்கள் விடுதலை முன்னணியே காட்சிப்படுத்தியது. ஆனால், தேர்தல் இருதியில் 03 சதவீதமான வாக்குகளையே பெற்றுக்கொள்வார்கள்.

அதேபோன்று, பொதுஜன பெரமுன இல்லாமல் தம்மால் செய்ய முடியும் என்று ஒருசிலர் கருதுவார்களாக இருந்தால் அது தவறான நிலைப்பாடாகும். 225 பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவாவார்கள் என்பது உண்மையான விடயமாகும். ஆனால், இந்த 225 பேர் அரசாங்கத்தை அமைக்க முடியாது. மக்களே அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள். எனவே, 2024 ஆம் ஆண்டு யார் அரசாங்கத்தை அமைத்தாலும் பொதுஜன பெரமுன இல்லாமல் அந்த அரசாங்கத்தை அமைக்க முடியாது. இதுவே அடுத்த வருடமுள்ள பாரிய சவாலாகும்.

அடுத்த வருடம் நாங்கள் தனியான அரசாங்கமொன்றை உருவாக்கவே திட்டமிட்டுள்ளோம். அது சிறந்த அரசாங்கமாக இருக்கும். ஒருவேளை எங்களால் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் பெரும் பலம்பொருந்திய எதிர்க் கட்சியாக செயற்படுவோம். அதற்கு காரணம் என்று ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஆட்சிக்கு வரும்போது உண்மை நிலைமை என்ன என்பதை புரிந்துகொள்வார்கள். ஸ்திரமற்ற நாடொன்றை உருவாக்குவதே மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்பார்ப்பாகும். மாறாக நாடு ஸ்திரமடைந்துவிட்டால் விடுதலை முன்னணி இயற்கையாகவே ஸ்திரமற்றுப் போய்விடும் என்றார்.