கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசியும், ஆலோசனையும் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
இதன்பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் விரைவில் கண்டி சென்று, மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பார்கள் எனக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரச கூட்டணியில் அங்கம் வகித்தாலும், அரசின் செயற்பாடுகளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடுமையாக விமர்சித்து வருகின்றது. இதனால் மொட்டு கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது.
அரசுக்குள் இருந்துகொண்டு, சலுகைகளை அனுபவித்தபடி விமர்சிப்பதைவிட, கௌரவமாக வெளியேறுங்கள் எனச் சுதந்திரக் கட்சியினருககு மொட்டு கட்சி உறுப்பினர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புதியதொரு கூட்டணியைக் கட்டியெழுப்புவதில் சுதந்திரக் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் சுதந்திரக் கட்சிக்குள்ளும் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, ஆலோசனை பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் விரைவில் முடிவொன்ற எடுக்கவுள்ளார். அதற்காகவே அமைச்சரவை மறுசீரமைப்பைக்கூட அவர் பிற்போட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.