மட்டக்களப்பு காத்தான்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான டீசலை கைப்பற்றிய காத்தான்குடி பொலிஸார் இளம் வர்த்தகர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
காத்தான்குடி ரெலிகொம் வீதி இரண்டாம் குறுக்கு லேனில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த இளம் வர்த்தகர் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதுடன் அவரது வர்த்தக நிலையை களஞ்சிய சாலையில் பதுக்கி வைக்கப்பட்டு எட்டு பரல்களில் அடைக்கப்பட்டிருந்த 1510 லீற்றர் டீசலை கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டுதலுடன் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த டீசல் தகரத்தில் அடைக்கப்பட்டு கூடிய விலைக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக காத்தான்குடி பொலிஸர் தெரிவித்தனர்
மீட்கப்பட்ட டீசலையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிர் மேலும் தெரிவித்தனர்