மன்னார் மாவட்டத்தில் வெள்ள நிலைமையால் 43879 பேர் பாதிப்பு!

0
95

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, மாவட்டத்தில் 12 ஆயிரத்து 485 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 879 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று மாலை வரையான தகவலின் படி 43 ஆயிரத்து 879 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 16 தற்காலிக நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர் தரப் பரீட்சைக்கான மத்திய நிலையங்கள் இல்லாத பாடசாலைகள் மற்றும் மதஸ்தலங்கள், பொது மண்டபங்கள் இவ்வாறு தற்காலிக நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
குறித்த நலன்புரி நிலையங்களில் 419 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 426 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும், ஏனையவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேங்கியுள்ள வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில், பிரதேச செயலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், கிராம அலுவலர்கள் தமது கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை திரட்டி வருவதோடு, அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அனர்த்தங்கள் ஏற்பட்டால் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முப்படையினரும் தயார்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.