மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மத வழிபாட்டிடங்களில் மின்விளக்குகளை ஒளிரவிடாமல் இருக்க பிக்குகள் எடுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக, தேவாலயங்களிலும் மின் விளக்குகளை அணைக்குமாறு கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித், தேவாலயங்களுக்கு அறிவித்துள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். இதன்படி இன்று மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பௌத்த வழிபாட்டிடங்களில் மின் விளக்குகள் அணைக்கப்படும் போது தேவாலயங்களிலும் மின்விளக்குகள் அணைக்கப்படும் என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ குறிப்பிட்டார். அதிகரித்துள்ள மின் கட்டணத்தினால் மத ஸ்தலங்களும் பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தினால் பொது மக்கள் மட்டுமின்றி மத வழிபாட்டுத் தலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த அடையாளப் போராட்டம் நடத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.