யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில், கரைவலை சம்மாட்டிமார்களின் அத்துமீறல் அதிகரிப்பு

0
145

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில், கரைவலை சம்மாட்டிமார்களின் அத்துமீறல், தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில், ஏனைய மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், இன்று அதிகாலை 4.00 மணியளவில், படகு ஒன்றில் மீன்பிடிக்க புறப்பட்ட இரு மீனவர்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். காலை 6.00 மணிக்கு பின்புதான், கரைவலை தொழில் செய்ய அனுமதி என்ற சட்டம் காணப்படுகின்ற போதும், கட்டைக்காடு சம்மாட்டி ஒருவர், தனது கரைவலையை, சரியாக, இன்று அதிகாலை 4.20 மணியளவில் கடலில் வீசியுள்ளார்.
இதனால், குறித்த மீனவர்கள், எதிர்பாராத விதமாக கரைவலையில் சிக்கியதுடன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். நங்கூரம், கத்தி போன்ற ஆபத்தான பொருட்களோடு, பலமாக அடிபட்டதில், மீனவர் ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதுடன், மூக்கு, வாயால் இரத்தமும் கசிய தொடங்கியது. காலை 6.00 பின்பே, கரைவலைக்கு அனுமதி உள்ள போதும், குறித்த சம்மாட்டியின் செயல் கண்டிக்கப்பட வேண்டும், மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், பாதிப்புக்குள்ளான மீனவர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில், கட்டைக்காடு மீனவ சங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், உரிய தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில், கரைவலை சம்மாட்டிக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
தொடர்ச்சியாக, சட்டத்தை மீறிவரும் கரைவலை சம்மாட்டிமார் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, அப்பகுதி சிறு தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.