வெடுக்குநாறி, உருத்திரபுரீஸ்வரர் ஆலயங்களுக்கு விதுர விரைவில் விஜயம்

0
189

வவுனியா வெடுக்குநாறி மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயங்களுக்கு தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் இந்த விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளதாகவும், இதன்போது இந்த ஆலயங்களில் காணப்படும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு குருந்தூர் மலையை அண்மித்து 400 ஏக்கர் பகுதியை தொல்பொருள் செயல்பாடுகளுக்காக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு – கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற தொல்பொருள் அகழ்வாராச்சியின்போது வடக்கு – கிழக்கில் ஏற்படுகின்ற பிரச்னைகள் தொடர்பிலான கலந்துரையாடல் தொல்பொருள் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதன்போது, முல்லைத்தீவு குருந்தூர் மலையை அண்மித்து 400 ஏக்கர் காணியை கையகப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை நிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன் ஆரம்பத்தில் 72 ஏக்கரே அப்பகுதியில் காணப்பட்டதென்றும் 400 ஏக்கரைப் பெற்றுக்கொள்ளுதல் பொருத்தமற்ற செயலாகும் என்றும் எடுத்துக்கூறப்பட்டது.

இதனையடுத்து இராஜாங்க அமைச்சரும் அதிகாரிகளும் 400 ஏக்கரைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்தப்படுவதாக அறிவித்தனர்.

அதற்கு அடுத்தபடியாக, கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் அகழ்வாராச்சி தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதன்போது தொல்பொருள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் குறித்த கோவிலின் உள்ளே தொல்பொருள் சான்றுகள் இருப்பதாகவும் அதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்தாது போய்விட்டால் சான்றாதாரங்கள் அழிந்து விடும் என்றும் கூறினார்.

எனினும், இந்த ஆலயத்தின் வரலாற்றுக் காலத்து விடயங்களையும் முன்வைத்ததோடு இராஜாங்க அமைச்சர் அங்கு நேரடியாக விஜயம் செய்தால் நிலைமைகளை உணரமுடியும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு அவரும் சமிக்ஞையொன்றைக் காட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆலயம் தொடர்பில் பேசப்பட்டது.

அதுதொடர்பில் நீதிமன்றம் இடைகாலத் தடை உத்தரவுகளை விதித்துள்ள நிலையில் எதிர்வரும் சித்திரைப் பௌர்ணமி தினத்திற்கு பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான அனுமதி கோரப்பட்டது.

நீதிமன்றில் வழக்கு உள்ளமையால் அதிகாரிகள் தரப்பில் எவ்விதமான உத்தரவாதங்களும் வழங்கப்படவில்லை.

எனினும் அப்பகுதிக்கு நேரில் விஜயம் செய்ய வேண்டும். அதன் ஊடாக நிலைமைகளை உணர்ந்து கொள்ளமுடியும் என்றும் எடுத்துரைக்கப்படவும் இராஜாங்க அமைச்சர் அதற்கு உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிலாவரைக்கிணறு சம்பந்தமாகவும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டதோடு முன் அனுமதி பெறாது தொல்லியல் துறை அதிகாரிகளின்; பிரவேசங்களை நிறுத்துவதன் ஊடாக முரண்பாடுகளை குறைக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.