நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி கூறினாலும் அது வெறும் வாய்ச்சொல்லே தவிர செயலில் வெளிப்படுத்தவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டினார்.
11 பேர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் கிடைக்காத நியாயம் இதனை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணை இடம்பெறும்போதே அதில் சம்பந்தப்பட்டவருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், புதிய அரசமைப்பு குறித்து பேசும் ஜனாதிபதி தலைமையிலான அரசே, 20ஆவது திருத்தச் சட்டமூலம் சர்வாதிகார ஆட்சியை உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
அரசமைப்பை மாற்றி ஆட்சியாளர்களை உறுதிப்படுத்துவது அவசியமில்லை மாறாக அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
எனவே, இந்த மாற்றத்தை மக்களே மாற்றியமைக்க வேண்டும் எனவும், புதிய அரசியல் பயணமொன்றை உருவாக்கினாலேயே இளம் சமூகத்திற்கு நன்மை கிடைக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.