2025 ஆம் ஆண்டின் முதல் 16 நாட்களில் மன்னாரில் இன்று இடம்பெற்ற சம்பவம் உட்பட, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பாதாள உலக பிரமுகர்களால் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இக் குற்றச் செயல்களை உடனடியாக நிறுத்துவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வலியுறுத்தியுள்ளார். இவ் நடவடிக்கைகளை வழிநடத்துபவர்களை நீதிக்கு முன் கொண்டு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள பிரேமதாச, ‘இச் சம்பவங்களினால் சாதாரண குடிமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை சுதந்திரமாகவும் அச்சமின்றியும் மேற்கொள்ள முடியாத சூழலை உருவாக்கியுள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் முதல் 16 நாட்களில் ஐந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. ஆபத்தான சூழ்நிலையை நான் வலியுறுத்த வேண்டும். இத் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் சாதாரண குடிமக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை சுதந்திரமாகவும் அச்சமின்றியும் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி தற்போது வெளிநாட்டிலுள்ள 188 நபர்களுக்கு சர்வதேச சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்களில், 63 பேர் கொலைகள், மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல் மற்றும் பிற சமூக விரோத செயல்கள் உட்பட வெளிநாடுகளில் இருந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்வது எந்தவொரு அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும். குடிமக்களின் பாதுகாப்பைப் பாதுகாத்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சுகாதாரம், உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான அணுக்களை உறுதி செய்தல் ஆகியவை இதில் அடங்கும். இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைத்தலைவர்களையும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இந் நிலைமை அதிகரித்தால், அது சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை கடுமையாக சீர்குலைக்கும் மற்றும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதற்கான மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும்’ என்று இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.