அரசாங்கத்தின் கவனமின்மை நாட்டை பேரழிவுக்குள் இட்டுச் செல்லும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் மறைக்கின்றதெனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தவை வருமாறு: ‘நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில், இந்தத் தொற்றுநோய் சூழ்நிலையில், மக்கள் முகங்கொடுத்த பிரச்னைகள் தொடர்பில் தெரிவிப்பதற்கு, ஓர் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
அந்தவகையில் நேற்று இரவு மாத்திரம், ராஜகிரிய, கம்பஹா, குருநாகல் ஆகிய பகுதிகளில், 4 மரணங்கள் பதிவாகியிருந்தன. இவ்வாறு உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உண்டு.
அந்த இறப்புக்கு, கொரோனா வைரஸ்தான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நாட்டை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பதற்கான முயற்சியை, அரசாங்கம் கைவிட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
மேலும், அரசாங்கத்தின் கவனமின்மை நாட்டை பேரழிவுக்குள் இட்டுச் செல்லும்’ என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.